Tuesday 2 January 2024

நற்றுணையாவது நாதன் நாமம் நம சிவாயவே!

திருச்சிற்றம்பலம்

 

 
 
“எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே”

-  திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல் : இரண்டாம் திருமுறை

பொருளுரை :

தேன் பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, குளிர்ச்சி பொருந்திய இயற்கை அழகு மிகுந்து விளங்கும் பிரமபுரத்துள் சங்கு போன்ற வெண்ணிற மேனியனாய் விளங்கும் சங்கரன் தன் தன்மைகள், தன் அடியவர் அவ்விடத்தில் எப்பிறப்பை எய்தினாலும் எம்பெருமானாகிய அவ்விறைவன் எருதேறிச் சென்று அவற்றுக்கு ஏற்ற வகையில் அங்கங்கே தோன்றி இங்கே என அருள் புரியும் செயல்களாகும்.
 


திருச்சிற்றம்பலம்...

Wednesday 13 October 2021

திருவருட்பா- வள்ளலார் சிவாய நம என்ற மந்திரத்தின் தன்மையை கூறுகிறார்

 
இங்கே வள்ளலார் சிவாய நம என்ற மந்திரத்தினை தன் மீது ஆணை என்று கூறி விளக்குகிறார்

 

1. பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

2. கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

3. வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.

4. கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

5. வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

6. கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.

7. நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.

8. எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

9. சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

10. உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.

11. உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.

நாமும் இதனை உணர்ந்து சிவாய நம என்று நாளும் சொல்லி சிவன் அருளைப் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்

 

Friday 19 July 2019

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல்கள்...




 
1. மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
    மிதியாமை கோடி பெறும்


பாடல் விளக்கம்:- 
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...


2.  உண்ணீர்உண் ணீரென் றுபசரியார் தம்மனையில்
     உண்ணாமை கோடி பெறும்



பாடல் விளக்கம்:- 
விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... 

3.  கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
     கூடுவதே கோடி பெறும்


பாடல் விளக்கம்:-
கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... 


4.  கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
     கோடாமை கோடி பெறும்


 பாடல் விளக்கம்:-
எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...
 

Sunday 19 May 2019

ஔவையார் பாடல்கள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும்...





ஔவையிடம் முருகபெருமான் கேட்ட கேள்வியும், அவர் சொல்லும் பதில்களும்...

அரிது எதுவோ?

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே

கொடியது எது?

கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர்கையால் இன்புற உண்பதுதானே!

பெரியது எது?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்.
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமும் நான்முகன் படைப்பில் வந்து
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகளில் துயின்றோன்
அலைகடலோ குறுமுனியின் கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியொ அரவினுக்குற் ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவனோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமையை சொல்லவும் பெரிதே!

இனியது எது?

இனியது கேட்கின் வரிவடிவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவிடல் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நனவிலும் காண்பதுதானே

புதியது எது?

பாடலென்றும் புதியது
பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது.
முருகா உன்னைப் பாடும் பாடலென்றும் புதியது.

Friday 19 April 2019

அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே



கல்லா பிழையும் கருதா பிழையும் கசிந்து உருகி
நில்லா பிழையும் நினையா பிழையும் நின் ஐந்தெழுத்தை
சொல்லா பிழையும் துதியா பிழையும் தொழா பிழையும்
எல்லாபிழையும் பொறுத்து அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.

பட்டினத்தார்

Friday 4 January 2019

பாவங்களின் 42 வகை.வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்



ராமலிங்க அடிகளார் வள்ளலார், பாவங்கள் என்று 42 வகையான விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார்.

1   நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
   
2    வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
   
3    தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
   
4    கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
   
5    மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
   
6    குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
   
7    ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
   
8    தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ
   
9    மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
   
10    உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
   
11    களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
   
12    பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
   
13    ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
   
14    வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
   
15    வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
   
16    பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
   
17    இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
   
18    கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
   
19    நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
   
20    கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
   
21    கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
   
22    காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
   
23    கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
   
24    கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
   
25    குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
   
26    குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
   
27    கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
   
28    பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
   
29    பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
   
30    கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ!
   
31    ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
   
32    கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
   
33    அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
   
34    குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ!
   
35    வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
   
36    பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
   
37    பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
   
38    ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
   
39    சிவனடியாரைச் சீறி வைதேனோ!
   
40    தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
   
41    சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
   
42    தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
   
43    தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
   
44    என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!

இந்த பாவங்களை கூடுமானவரை எதையும் நாம் செய்யாமல் இருப்போம்...

                                ↫  திருச்சிற்றம்பலம்  ↬



Wednesday 7 November 2018

திருமுறை





சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. - திருமுறை



தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.